நெல்லையில் 254% அதிக மழை! தீபாவளியிலும் கனமழை கொட்டி தீர்க்கப் போகுது!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
தீபாவளிக்குப் பிறகும் மழை தொடரும்!
மீனவர்கள் வரும் 21-ஆம் தேதி காலைக்குள் ஆழ்கடலில் இருந்து கரை திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நாளை, தீபாவளியன்று வட கிழக்கு தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 23 முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நெல்லையில் 254% அதிக மழைப்பொழிவு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (திங்கட்கிழமை) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 19 மற்றும் 24 ஆகிய நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அதிகம் ஆகும். நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 254 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழையின்போது மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் வானிலை மையத் தலைவர் அமுதா கேட்டுக்கொண்டார்.