- Home
- Tamil Nadu News
- எடப்பாடி குருட்டு அதிர்ஷ்டத்தில் லாட்டரி சீட்டு அடிப்பது போல் முதல்வரானார்.! போட்டுத்தாக்கும் டிடிவி தினகரன்
எடப்பாடி குருட்டு அதிர்ஷ்டத்தில் லாட்டரி சீட்டு அடிப்பது போல் முதல்வரானார்.! போட்டுத்தாக்கும் டிடிவி தினகரன்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்து டிடிவி தினகரன் ஆண்டிபட்டியில் பேசினார். பழனிச்சாமி திமுகவுக்கு ஆதரவளித்து அதிமுகவை பலவீனப்படுத்துவதாகவும், துரோகத்திற்கு உதாரணமாக இருப்பார் என்றும் விமர்சித்தார்.

அதிமுக பொதுச்செயலாளாராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு குழப்பங்கள் அதிமுகவில் நிலவிவருகிறது. அதிகார தலைமையை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியால் பல தலைவர்கள் பிரிந்து தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக சார்பாக ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அவர்களை முதல்வராகிய தொகுதி.
அதிமுகவை பலவீனப்படுத்துகிறார் இபிஎஸ்
தேனி மாவட்டத்திலேயே அதிமுக மூழ்காத கப்பல் என்று கூறும் பழனிச்சாமி மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவளித்து தனது சுய லாபத்திற்காக சொந்த நலனுக்காக அதிமுகவை பலவீனப்படுத்தி வருகிறார். வருங்கால தமிழக அரசியல் வரலாற்றில் துரோகம் என்ற சொல்லுக்கு உவமையாக இருப்பார் எடப்பாடி பழனிச்சாமி.
1972 லிருந்து கட்சியில் இருக்கும் பழனிச்சாமி நான்தான் சீனியர் என்று கூறுவது பொய் என விமர்சித்தார். பொதுச் செயலாளர் பதவியை கையகப்படுத்தி வைத்துள்ளார். இரட்டை இலை சின்னம் அவரிடம் தான் உள்ளது.
குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர்
பழனிச்சாமிக்கு காவடி தூக்குபவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு பழனிச்சாமி மூடுவிழா நடத்தி விடுவார். பழனிச்சாமி குருட்டு அதிர்ஷ்டத்தில் லாட்டரி சீட்டு கிடைப்பது போல் முதல்வராகியுள்ளதாகவும் விமர்சித்தார்.
பழனிச்சாமி யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் ஆகலாம் என்று கூறுவது நயவஞ்சகமானது. பொதுச் செயலாளர் ஆவதற்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும், என்று பைலாவில் சட்ட திட்டங்களை மாற்றியவர் பழனிச்சாமி.
ஓரணியில் திரண்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும்
அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டால்தான் தீயசக்தி திமுகவை வீழ்த்த முடியும். அம்மாவின் ஆட்சியை கொண்டுவர முடியும். இதைத் தொண்டர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவோடு அம்மாவின் ஆட்சி அமையும் என்று நினைக்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, எங்கு போட்டியிடுவது? என்பது குறித்து முடிவு எடுக்கவில்லையென தெரிவித்தார். மும்மொழிக் கொள்கை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் எங்கள் கட்சி சார்பாக பிரதிநிதி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தவர், அந்த விவகாரத்தை தவிர்த்து வேறு ஏதாவது பேசினால் வெளிநடப்பு செய்வோம் என தெரிவித்தார்.