எகிறிய தக்காளி விலை அதிரடியாக குறைந்தது.. கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா.?
ஒரு மாதத்திற்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில், ஜூலை 1ம் தேதி ஒரு கிலோ தக்காளி விலை 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மறுநாளே ஒரு கிலோ 50 ரூபாய் என்ற நிலையை தொட்ட தக்காளி நாளுக்கு நாள் விலை அதிகரித்து சதம் அடிக்க தொடங்கியது. அடுத்த சில நாட்களில் சதம் அடித்த தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இரட்டை சதம் அடித்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவு வகைகள் தயாரிப்பதை தவிர்க்கப்பட்டது. தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு அதிரடி நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி விலை உயர்வுக்கு உற்பத்தி குறைந்ததே காரணம் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலையும் குறைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியானது படிப்படியாக குறைந்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக எண்ணிக்கை கணக்கில் தக்காளியை பொதுமக்கள் வாங்கிய நிலை மாறி கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.