தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!
தொடர் விடுமுறையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

விடுமுறை சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கோவை, திருச்சி, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும் 19ம் தேதி (வெள்ளிகிழமை], 20ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 21ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை டூ நெல்லை, மதுரை, கோவை
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தார், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19ம் தேதி (வெள்ளிகிழமை) அன்று 240 பேருந்துகளும், 20ம் தேதி (சனிக்கிழமை) 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை டூ பெங்களூரு
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் மொத்தம் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,.
மேலும் மாதாவரத்திலிருந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எப்படி முன்பதிவு செய்வது?
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,708 பயணிகளும் சனிக்கிழமை 6,292 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,052 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணித்துக் கொள்ளலாம்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணம் மேற்கொள்ளலாம்.

