- Home
- Tamil Nadu News
- திருத்தணியில் ரத்த வெள்ளத்தில் கதறிய வடமாநில இளைஞர்.. விடாத புள்ளிங்கோ.. தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
திருத்தணியில் ரத்த வெள்ளத்தில் கதறிய வடமாநில இளைஞர்.. விடாத புள்ளிங்கோ.. தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
திருத்தணி ரயில் நிலையம் அருகே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடந்த 27ம் தேதி திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது. மேற்கொண்ட புலன்விசாரணையில், Instagram Reels பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் (Children in Conflict with Law – CICLs) இந்த குற்றத்தை செய்திருப்பது தெரியவந்தது. மேற்கண்ட நான்கு CICL-களும் கடந்த 28ம் தேதி அன்று கைப்பற்றப்பட்டனர், இளையர் நீதிக்குழு (Juvenile Justice Board – JJB) முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதில், மூன்று CICL-க்கள் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு (Place of Safety) அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சட்டத்துக்கு முரண்பட்ட இளஞ்சிறருக்கு இளையர் நீதிக்குழுவால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட CICLக்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம்செலுத்தப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்கிறதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

