- Home
- Tamil Nadu News
- நாளை தை அமாவாசை.! ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
நாளை தை அமாவாசை.! ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!
தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய ராமேசுவரம் செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து ராமேசுவரத்திற்கு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தை அமாவாசை
அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் நிகழ்வானது நடைபெறும் அந்த வகையில் தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தை அமாவாசை நாளை கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவுப் போக்குவரத்து கழகம்
இது தொடர்பாக தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் தை அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்கு ஏதுவாக இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
இதன்படி வருகின்ற ஜனவரி 18ம் தேதியான நாளை தை அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் இன்று சனிக்கிழமை அன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும் சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கும் மற்றும் நாளை இராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம் சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பேருந்துகள் முன்பதிவு
எனவே மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

