- Home
- Tamil Nadu News
- Vijay: தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்..! Zoho நிறுவனர் பரபரப்பு கருத்து..
Vijay: தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்..! Zoho நிறுவனர் பரபரப்பு கருத்து..
தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியுடன் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம். மறு தேர்தல் நடத்தப்பட்டால் விஜய் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இல்லை
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த சூழலில், Zoho நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
வியாழக்கிழமை சமூக வலைதளமான X-இல் பதிவிட்ட அவர், “தற்போதைய எண்கள் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை காட்டவில்லை. எப்படியாவது கூட்டணி அமைத்து உருவாகும் அரசு நீடித்த நிலைத்தன்மையுடன் செயல்படும் வாய்ப்பு குறைவு. பல்வேறு அரசியல் அழுத்தங்கள் இருக்கும். தமிழக மக்கள் இதைவிட சிறந்த ஆட்சியை பெற தகுதியானவர்கள்,” என குறிப்பிட்டார்.
10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
மே 4ஆம் தேதி வெளியான தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. பல தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளின் இரட்டை ஆதிக்கத்தையும் உடைத்தெறிந்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) தனிக்கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றியது.
TVK 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளன. இதனால், சிறிய கட்சிகளின் ஆதரவை பெற விஜய் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இதேவேளை, தற்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆளுநரிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.
அதிமுக திட்டவட்டம்
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியும் முக்கிய திருப்பம் எடுத்துள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது அந்த கூட்டணியிலிருந்து விலகி, “நிபந்தனை ஆதரவு” வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதிமுக தெளிவாக TVK அரசை ஆதரிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு, “TVK மீண்டும் தேர்தல் நடந்தால் சூப்பர் பெரும்பான்மையுடன் திரும்பி வரலாம். அதை தடுக்க திமுகவும் அதிமுகவும் ஒன்றாக போட்டியிட விரும்பினால் போட்டியிடட்டும். பாஜக தனியாகவே போட்டியிட வேண்டும். பூஜ்ய இடங்கள் கிடைத்தாலும் பரவாயில்லை; தமிழகத்தில் பாஜகவுக்கு இது புதிய தொடக்கமாக இருக்கலாம்,” என்றார்.
மறு தேர்தல்..
அரசு அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, விஜய் புதன்கிழமை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை சந்தித்தார். ஆனால், TVK-வின் ஆதரவு எண்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவாகவில்லை என்றும், தற்போதைய எண்ணிக்கையில் ஆளுநர் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால், TVK-வின் பலம் 107 ஆக குறையும்.
இந்நிலையில், “ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்துவது தான் சிறந்த தீர்வாக இருக்கலாம். இந்த முறை ‘வாக்குக்கு பணம்’ முறையை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது வெளிப்படும்,” என்று ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

