- Home
- Tamil Nadu News
- TN Land Registration: நிலம் வாங்க போறீங்களா? விஜய் அரசு கொடுத்த பம்பர் ஆஃபர்! முழு விவரம் உள்ளே!
TN Land Registration: நிலம் வாங்க போறீங்களா? விஜய் அரசு கொடுத்த பம்பர் ஆஃபர்! முழு விவரம் உள்ளே!
TN Land Registration: தமிழகத்தில் நிலம் வாங்கப்போகிறவர்களுக்கு முதல்வர் விஜய்யின் தவெக அரசு இனிப்பான செய்தி சொல்லியுள்ளது. அது என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசுக்கு வருமானம் ஈட்டும் சார் பதிவாளர் அலுவலகங்கள்
தமிழ்நாட்டில் சொத்துகளை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு நாளுக்கு நாள் பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது. ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்வதற்கு சந்தை மதிப்பு மற்றும் பதிவு கட்டணம் என மொத்தம் 9% வசூலிக்கப்படுகிறது. இதில் 7 சதவீதம் அரசின் கஜானாவிற்கு வந்து விடுவதால் தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் பத்திரப்பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுவும் முகூர்த்த நாட்களிலும், விஷேச தினங்களிலும் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் பத்திரப்பதிவு துறை சார்பில் அந்த நாட்களில் அதிக அளவிலான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளை (மே 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
இது தொடர்பாக பத்திர பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 29.05.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
தட்கல் டோக்கன்களும் உண்டு
எனவே, வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 29.05.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த அதிரடி விசேஷ ஏற்பாட்டின் மூலம், நாளை ஒரே நாளில் மட்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எவ்விதத் தாமதமும் இன்றி தங்களது சொத்துப் பதிவுகளை மேற்கொள்ள முடியும். வழக்கமாக முகூர்த்த நாட்களில் ஆன்லைன் டோக்கன் கிடைக்காமல் தவிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த கூடுதல் வில்லைகள் (Tokens) பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
குறிப்பாக, தட்கல் முறையில் அவசரமாகப் பதிய நினைப்பவர்களுக்காக கூடுதலாக 4 வில்லைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் நாளை பயன்பாட்டில் இருக்கும். வைகாசி மாதத்தின் இந்த சுபமுகூர்த்த நாளைத் தவறவிடாமல் பயன்படுத்த நினைக்கும் பொதுமக்கள், உடனடியாக வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று இந்த கூடுதல் டோக்கன்களை முன்பதிவு செய்து பயனடையலாம்.

