- Home
- Tamil Nadu News
- Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் தெறிக்க விடப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் தெறிக்க விடப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை? என்பது குறித்து பார்ப்போம்.

தமிழகத்தில் மழை பெய்யுமா?
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளாவிலும், தமிழகத்திலும் எதிர்பார்த்த மழை இல்லை. வழக்கமாக பருவமழை கேரளாவில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இப்போது அந்த அளவுக்கு வீரியம் இல்லை. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் போதிய மழை இல்லை. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.
2 மாவட்டங்களில் கனமழை
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 30) 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை 7 மாவட்டங்களில் மழை
ஜூலை 1ஆம் தேதி மற்றும் 2ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல்
ஜூலை 3 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு உண்டா?
ஜூலை 4 ஆம் தேதி மற்றும் ஜூலை 5 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

