- Home
- Tamil Nadu News
- நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய்... பத்திர பதிவு கட்டணமும் இலவசம்.! அசத்தும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய்... பத்திர பதிவு கட்டணமும் இலவசம்.! அசத்தும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
தமிழக அரசு மகளிருக்கு நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நஞ்சை அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.

தமிழக அரசின் திட்டம்
தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், மானிய கடன் உதவி திட்டம், சொந்த தொழில் தொடங்க கடன் உதவி திட்டம் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது மகளிர் நிலம் வாங்க 5 லட்சம் ரூபாயை அரசு அள்ளிக்கொடுக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் பயன் பெற இன்றே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) மகளிரை சொந்த விவசாய நில உரிமையாளர்களாக மாற்றி அவர்களது சமூக–பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறிக்கோளாக அமைகிறது.
நிலம் வாங்க 5 லட்சம் மானியம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நில உடைமையினை அதிகரிக்கும் பொருட்டும், மகளிரின் சமூக நிலையை உயர்த்தும் நோக்கத்தோடும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்திற்கும் 50% அல்லது அதிகபட்சமாக ரூ. 5.00 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
இதன் மூலமாக, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. வாங்கப்பட்ட நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
திட்டத்தில் பயன் பெற தகுதிகள் என்ன.?
தகுதி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மகளிராக இருக்க வேண்டும். மகளிர் இல்லாத குடும்பங்களில் ஆண்களுக்கு வழங்கப்படும்.
வயது: 18-55
குடும்ப ஆண்டு வருமானம் < ரூ. 3 இலட்சம்
விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.
தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்பதார் நிலமற்றதாக இருக்க வேண்டும், மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் அவரும் குடும்பமும் நிலத்தை விற்றிரக்கக்கூடாது
மானியம் பெற தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள்:
சாதி சான்றிதழ் (Caste Certificate)
ஆதார் அட்டை
குடும்ப அட்டை / வருமானச் சான்று
வங்கி கணக்கு விவரங்கள்
குடும்ப வருமானம், தொழில் விவரம் (விவசாயம்/விவசாய கூலி)
புகைப்படம்
திட்டத்தின் சிறப்பம்சம்:
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : மாவட்ட மேலாளர், தாட்கோ.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tahdco.com