- Home
- Tamil Nadu News
- மாதம் 25 ஆயிரம் ஊக்கத்தொகை.! மாணவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு - விண்ணப்பிக்க அழைப்பு
மாதம் 25 ஆயிரம் ஊக்கத்தொகை.! மாணவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு - விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சியும், ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

மாணவர்களுக்கான திட்டங்கள்
கல்வி தான் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும். அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி பயில பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிக உயர் பதவிக்கான தேர்வான குடிமைப்பணித் தேர்வுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்குவது மட்டுமில்லாமல் ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையிலுள்ள அகில குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய இந்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும். அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி
அமைதியான சூழலில் அமைந்துள்ள இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்கும் இடவசதி. தரமான உணவு. கணினி மயமாக்கப்பட்ட நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. சிறந்த ஆர்வலர்கள் பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன். தங்களை தேர்வுக்குத் தயார்படுத்தி கொள்ளும் வகையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
கடந்த 25.05.2025 அன்று நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய தேர்வர்களில் 98 ஆர்வலர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் 26 பெண் ஆர்வலர்கள் 2 மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 14.10.2024 முதல் 24.05.2025 வரை உண்டி உறைவிடத்துடன் கூடிய அறைகள் வழங்கப்பட்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. முழுநேர ஆர்வலர்களுக்கு நடப்பாண்டில் 34 நேரடி தொடர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
ஊக்கத்தொகையோடு பயிற்சி
குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜூன் 2025 முதல் ஆகஸ்டு 2025 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் ஊக்கத் தொகையாக ரூ.25,000/- "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயற்சி மையத்தில் சேர அரசு அழைப்பு
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 14.06.2025 (சனிக்கிழமை) காலை 6.00 மணி முதல் 15.06.2025 www.civilservicecoaching.com (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.00 மணி வரை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் 15.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) இணையத்தில் வெளியிடப்பட்டு, 16.06.2025 மற்றும் 17.06.2025 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 18.06.2025 முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில், 225 ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (வாட்ஸ்-அப்) மூலமாகவும், www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.