கட்சி ஏஜெண்டாக மாறிய ஆளுநர்கள்.. ஒரே தீர்வு இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களைப் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

உரையை படிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக சட்டப்பேரவையில் தனது உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதேபோல் கேரள சட்டப்பேரவையில் மாநில அரசு எழுதிக் கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை அந்த மாநில ஆளுநர் தவிர்த்தார். மேலும் கர்நாடக சட்டப்பேரவையிலும் அந்த மாநில ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறினார்.
கட்சி ஏஜெண்டாக மாறி விட்ட ஆளுநர்கள்
இந்த நிலையில், ஆளுநர்கள் கட்சி ஏஜெண்டாக மாறி விட்டதாகவும் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு ஒரே தீர்வு என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''முதலில் தமிழ்நாடு. பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. இந்த முறைமை தெளிவாகவும் திட்டமிட்டபடியும் உள்ளது.
ஒரே தீர்வு இதுதான்
மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களைப் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துகின்றனர். நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்போது ஒரே தீர்வு.
திமுக முயற்சி எடுக்கும்
இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து, இந்த வழக்கற்றுப் போன மற்றும் பொருத்தமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர திமுக முயற்சிக்கும்'' என்று கூறியுள்ளார்.

