ஆடி அமாவாசை! பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
ஜூலை 23ம் தேதி முதல் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

ஆடி அமாவாசை
தமிழகத்தில் பவுர்ணமி, அமாவாசை, தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை போன்ற பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 23ம் அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகின்ற ஜூலை 24ம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்
இதனடிப்படையில் வருகின்ற ஜூலை 23ம் தேதி புதன்கிழமை அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர். கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் ஜூலை 24 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம். கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முன்பதிவு
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.