- Home
- Tamil Nadu News
- TN Rain Alert : அக்னி நட்சத்திரம் முடியும்முன் மழை.. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அலர்ட்
TN Rain Alert : அக்னி நட்சத்திரம் முடியும்முன் மழை.. பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அலர்ட்
அக்னி நட்சத்திர வெயிலால் தவித்த தமிழ்நாட்டுக்கு பெரிய திருப்பம் வர உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்களுக்கு சற்று நிம்மதி தரும் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை வரும் மே 16ஆம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் பருவமழை தொடங்கும் சூழல் உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மே 19 வரை தமிழகத்தில் மழை தொடரும்
மே 14 முதல் 19ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திர வெயில் நீடித்தாலும், இந்த மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறையக்கூடும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மழை வாய்ப்பு
இதற்கிடையில் மீனவர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்றும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

