- Home
- Tamil Nadu News
- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை படை.. 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை படை.. 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. செல்வப்பெருந்தகை கண்டனம்
இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கைதுக்கு செல்வப்பெருந்தனை கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசிடம் இலங்கை கடற்படையின் செயலை தடுத்து நிறுத்துமாறு எத்தனைமுறை கூறினாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உறுதியான நடவடிக்கை தேவை
ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
இந்தியா, இலங்கை இடையே பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இல்லையென்றால், பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

