பாஜகவில் சரத்குமாருக்கு முக்கிய பொறுப்பு.? அமித்ஷா போட்ட செம பிளான்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக முக்கிய நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்துள்ளார்.

தமிழக தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்கல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கவிட்டன. திமுக சார்பாக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் வீடு வீடாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதிமுக சார்பாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என தொகுதி தொகுதியாகிப்பவே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி,
இந்த நிலையில் எப்படியாவது வருகிற சட்டமன்ற தேர்தலில் கால் பதித்து விட வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பாஜக, இதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் களப்பணியை தொடங்கியுள்ளது.
வேகமெடுக்கும் பாஜக
இந்த நிலையில் பாஜக முக்கிய நிர்வாகிகளை அமித்ஷா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தற்போது உள்ள கள நிலவரம் தொடர்பாக ஆலோசித்தனர். மேலும் கூட்டணி ஒருங்கிணைப்பு தொடர்பாகவு்ம ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து இருப்பதாகவும் இதனை உடனே கலைய வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான சரத்குமார் நேரில் சந்திப்பு; பாஜக உட்கட்சி விவகாரம் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் சரத்குமார்
நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பொழுது தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து ராதிகா சரத்குமாருக்கு விருதுநகரில் பாஜக சார்பில் களம் இறங்கும் வாய்ப்பு வழங்கியது பாஜக தேசிய தலைமை.
சரத்குமாருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சரை டெல்லியில் தனது ஆதரவாளருடன் சரத்குமார் சந்தித்து பேசியது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவை சந்தித்த சரத்குமார்
குறிப்பாக தமிழகத்தில் சரத்குமார் நாடார் சமுதாய வாக்குகளை கவர முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். சரத்குமாரை பொருத்தமட்டில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சரத்குமார் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சரத்குமாருக்கு மாநில அளவில் மிகப்பெரிய பொறுப்பு வழங்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் சரத்குமாருக்கு முக்கிய பொறுப்பை வழங்கப்படும் என கூறப்படுகிறது.