- Home
- Tamil Nadu News
- MK Stalin Vs Vijay: முதல்வர் விஜய் VS முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! பதவியேற்ற முதல் நாளே பரபர அரசியல்!
MK Stalin Vs Vijay: முதல்வர் விஜய் VS முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! பதவியேற்ற முதல் நாளே பரபர அரசியல்!
MK Stalin: தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், மாநிலத்தின் 10 லட்சம் கோடி கடன் சுமை குறித்து பேசியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடன் அளவு வரம்புக்குள் இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் விஜய்: சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான். வறுமை, பசி எனக்கும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் கிடையாது. உங்களில் ஒருவன். உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன், உங்கள் தம்பி மாதிரி தான் நான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைப்பதால் தான் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறீர்கள்.

தமிழகத்தின் நிதிநிலை மோசம்
எனக்காக கூட நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள், அவமானங்களை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் என் கூடவே நின்று இன்று ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கி உள்ளீர்கள். எது சாத்தியமோ அதுமட்டும்தான் நான் செய்வேன். அப்போ சாத்தியம் இல்லாத்தை செய்ய மாட்டியா? என நீங்கள் கேள்வி கேட்பது தெரிகிறது. இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதி எனக்கு உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. 10 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன இருக்கு, எது இல்லை என்பதை உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளேன் என பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வர் விஜய்க்கு குற்றச்சாட்டு மதிமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்து
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
அது உங்களுக்குத் தெரியாதா? விஜய்
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள்
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

