- Home
- Tamil Nadu News
- TVK Vijay Shock: பதவியேற்கும் முன்னரே விஜய்க்கு அதிர்ச்சி! நீதிமன்றம் சென்ற திமுக முன்னாள் அமைச்சர்! இன்று விசாரணை!
TVK Vijay Shock: பதவியேற்கும் முன்னரே விஜய்க்கு அதிர்ச்சி! நீதிமன்றம் சென்ற திமுக முன்னாள் அமைச்சர்! இன்று விசாரணை!
DMK Periyakaruppan: திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
நடந்து முடிந்த சட்டப்பேரவை தொகுதியில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி, அதிமுக கூட்டணி சார்பில் பாஜக ஆதரவு வேட்பாளராக திருமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யா மோகன் களமிறங்கினார். ஏப்ரல் 23ம் தேதி பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக மற்றும் தவெக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்
ஒவ்வொரு சுற்றிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்பாராத விதமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் எண்ணிக்கையை தொடங்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இறுதியில், திமுக முன்னாள் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதை அடுத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பெரியகருப்பன் குற்றம்சாட்டினார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
அதில், தபால் வாக்குகள் சரியான முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மறுஎண்ணிக்கை முறையாக நடத்தப்படவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கை நடந்தபோது பதிவு செய்யப்பட்ட காணொளி ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனிவாச சேதுபதி, சட்டமன்றத்தில் மே 13ம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை தற்காலிகமாக தடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று அவசர வழக்காக விசாரணை
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் விஜய் தனது புதிய அரசை இன்று அமைக்கும் நேரத்தில், இந்த வழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

