- Home
- Tamil Nadu News
- சொன்னபடியே கடன்கள் தள்ளுபடி.! மகளிர் சுய உதவி குழுவிற்கு அடித்தது ஜாக்பாட்- தமிழக அரசு அசத்தல் தகவல்
சொன்னபடியே கடன்கள் தள்ளுபடி.! மகளிர் சுய உதவி குழுவிற்கு அடித்தது ஜாக்பாட்- தமிழக அரசு அசத்தல் தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,21,998 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ. 2118.8 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மகளிர்களுக்கான திட்டங்கள்
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்றவை பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளன.
இதற்கு முன்னோடியாக மகளிரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவி
பெண்களுக்கு பொருளாதார சுயசார்பு, சேமிப்பு பழக்கம், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை அணுகுவதற்கு மகளிர் சுய உதவிக்குழு பெரும் அளவில் உதவியாக உள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு ஆரம்ப மூலதனமாக சுழல்நிதி வழங்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் உதவிகள் மூலம் சுய தொழில் செய்ய வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.1,21,998 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, இதில் 2.37 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.1910 கோடி, திருநெல்வேலியில் ரூ.1351.49 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு ட்ரோன் பயிற்சி
பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கடன் வழங்கல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் பெண்கள் சுயமாக தொழில் செய்திடும் வகையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 2023-24 முதல் 2025-26 வரை 15,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1261 கோடி மதிப்பில் ட்ரோன்கள் வழங்கப்படுகின்றன. இது வேளாண்மையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி
மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு பயிற்சிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் தரத்தை மேம்படுத்தி சந்தைப்படுத்த உதவப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ. 2118.8 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு 31.3.2021 வரை நிலுவையில் இருந்த ரூ.2,118.80 கோடி மதிப்புள்ள மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சேர்ந்த 10,56,816 பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.