- Home
- Tamil Nadu News
- TVK : ஆட்சிக்கு வந்ததும் தவெக-வுக்கு முதல் அடி; திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பங்கேற்க ஐகோர்ட் தடை!
TVK : ஆட்சிக்கு வந்ததும் தவெக-வுக்கு முதல் அடி; திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பங்கேற்க ஐகோர்ட் தடை!
Madras High Court Bars TVK MLA : திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tirupathur assembly constituency case
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, அவரது தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி என்ன?
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் சீனிவாச சேதுபதி பங்கேற்கக் கூடாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஒரே பெயரில் உள்ள இரண்டு தொகுதிகளின் தபால் வாக்குகள் மாற்றப்பட்டதாக திமுக தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி அமர்வுதான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தவெக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
சபாநாயகர் தேர்வு
சபாநாயகர் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனது முதல் அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக-வின் மூத்த தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா அறிவித்தார். அதேபோல, எம். ரவிசங்கர் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரையும், துணை சபாநாயகர் எம். ரவிசங்கரையும், தவெக மூத்த தலைவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாகச் சேர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். திமுக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் சபாநாயகர் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாதது, தவெக-வுக்கு கிடைத்த அரசியல் ரீதியான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு கோரிய விஜய்யின் அணுகுமுறைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
மூன்று தலைமுறை எம்.எல்.ஏ
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜே.சி.டி. பிரபாகர், மூன்று தலைமுறை தலைவர்களின் ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போது விஜய் என மூன்று முதல்வர்களின் ஆட்சிக்காலத்திலும் இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது அனுபவம், சபை நடவடிக்கைகளை சுமுகமாகக் கொண்டு செல்ல உதவும் என தவெக நம்புகிறது. 1980-ல், தனது 28 வயதில், வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், 2026 ஜனவரியில்தான் விஜய்யின் தவெக-வில் இணைந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக-வின் எழிலன் நாகநாதனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 73 வயதான பிரபாகர், கட்சியின் ஒரு முக்கிய முகமாகக் கருதப்படுகிறார். துறையூர் தொகுதி எம்.எல்.ஏ-வான எம். ரவிசங்கர், துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

