- Home
- Tamil Nadu News
- TVK : பண மோசடி செய்து எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி... சினிமா பாணியில் சேஸ் பண்ணி கைது செய்த போலீஸ் - பின்னணி என்ன?
TVK : பண மோசடி செய்து எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி... சினிமா பாணியில் சேஸ் பண்ணி கைது செய்த போலீஸ் - பின்னணி என்ன?
TVK Party Member Arrested : புதுக்கோட்டையில் 100-க்கும் மேற்பட்டோரிடம், அதிக வட்டி தருவதாகக் கூறி 25 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, தவெக நிர்வாகி சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TVK Party Member Arrested
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பு நிலவி வந்தது. காரணம், 100-க்கும் மேற்பட்டோரிடம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக எழுந்த புகார் தான். இந்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சரவணன். இவர் புதுக்கோட்டை நகரின் திருவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

மோசடி செய்த சரவணன்
போலீஸ் வட்டாரங்கள் தரும் தகவல்படி, சரவணன் கடந்த பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தனியாரிடம் கடன் வாங்குபவர்களிடமிருந்து பெருமளவில் பணம் வசூல் செய்துள்ளார். ஒவ்வொருவரிடமிருந்தும் 30 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை பணம் பெற்றிருக்கிறார். அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து இந்தப் பணத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில், தனது தாயாரின் உடல்நலக்குறைவு போன்ற தனிப்பட்ட காரணங்களைக் கூறியும் பணம் வாங்கியுள்ளார்.
சரவணன் தலைமறைவு
இப்படி, மொத்தமாக 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக சரவணனை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, ஆளுங்கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சரவணன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து, பாதிக்கப்பட்டவர்களில் பலர் கடந்த பத்து நாட்களாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
சேஸ் பண்ணி பிடித்த போலீஸ்
இந்தப் புகார்களின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்த சரவணனைக் கைது செய்தனர். பின்னர், அவரை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
சரவணன் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. கூடியிருந்தவர்களில் சிலர், "அவனை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று ஆவேசமாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தினரை சமாதானப்படுத்தி, சரவணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் உறுதியளித்தனர். மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலேயே தொடர்ந்து முகாமிட்டதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

