- Home
- Tamil Nadu News
- AIADMK: கண்முன்னே பேராபத்து.. சரிவை நோக்கி பேரியக்கம்? முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் வெளியேறுவதன் பின்னணி என்ன?
AIADMK: கண்முன்னே பேராபத்து.. சரிவை நோக்கி பேரியக்கம்? முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் வெளியேறுவதன் பின்னணி என்ன?
AIADMK: பூங்குன்றன், அதிமுகவின் தற்போதைய நிலையை வேர்கள் பலமிழந்த ஆலமரத்துடன் ஒப்பிட்டுள்ளார். அடிமட்டத் தொண்டர்களை புறக்கணிப்பதால் கட்சி வீழ்ச்சியைச் சந்திப்பதாகவும், இது தொடர்ந்தால் பேரியக்கம் சரிந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

பேராபத்து கண்முன்னே நிழலாடுகிறது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் அவ்வப்போது அதிமுக நிலை குறித்து முகநூல் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தமிழக அரசியல் களம் மற்றும் அஇஅதிமுகவின் தற்போதைய அரசியல் சூழலை ஆலமரத்தின் வேர்களோடு ஒப்பிட்டுள்ளார். அதாவது ஒரு மாபெரும் ஆலமரம் வீழ்வது என்பது, ஏதோ ஒரு நாள் வீசும் பலத்த காற்றினால் நடப்பது அல்ல; அது, பல ஆண்டுகளாய் மண்ணுக்குள் இருக்கும் அதன் வேர்கள் மெல்ல மெல்லத் தன் பலத்தை இழந்து வருவதன் இறுதிப் புள்ளியாகும். இயற்கையின் இந்த எளிய விதியைத் தற்போதைய தமிழக அரசியல் களத்தோடு, குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், சமூக அறிவியல் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வியந்து நோக்கும் ஒரு பேராபத்து கண்முன்னே நிழலாடுகிறது. "வேர்கள் பலமிழந்தால்... கிளைகளும் கனிகளும் எப்படி இருக்கும்?" என்ற கேள்வி, வெறும் தத்துவார்த்தக் கேள்வி அல்ல; அது ஒரு பேரியக்கத்தின் வீழ்ச்சியைத் துல்லியமாகக் கணிக்கும் தீர்க்கதரிசனம்.

அடிமட்டத் தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர்கள்
அரசியல் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒரு பிராந்தியக் கட்சியின் பலம் என்பது அதன் உச்சியில் இருக்கும் தலைவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அடிமட்டத் தொண்டர்கள், கிராமப்புறக் கிளைக் கழகங்கள், கொளுத்தும் வெயிலிலும் கொடிபிடிக்கும் எளிய மனிதர்கள் ஆகியோர்தான் அந்த இயக்கத்தின் 'ஆணிவேர்கள்'. பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் இந்த வேர்களைத்தான் தங்களின் ஜீவநாடியாகக் கருதினார்கள். உச்சி மாநாட்டில் ஒலிக்கும் கைதட்டல்களை விட, ஒரு குக்கிராமத்துத் திண்ணையில் இரட்டை இலைக்காகப் பேசும் எளிய தொண்டனின் குரலே இந்த இயக்கத்தை அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருந்தது.
முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
எப்போது ஒரு தலைமை, தன் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளையும், அவர்களின் நம்பிக்கையையும் இழக்கத் தொடங்குகிறதோ, அப்போதே வேரின் அழுகல் தொடங்கிவிடுகிறது. வேரிலிருந்து சத்துக்கள் மேலே செல்லாதபோது, உச்சாணிக் கிளையில் இருக்கும் இலைகளும் காய்களும் தானாகவே காய்ந்து உதிரத் தொடங்கும். இன்று அதிமுகவில் நடக்கும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களின் வெளியேற்றமும், மாவட்ட நிர்வாகிகளின் விலகலும் வெறும் 'அரசியல் சுயநலம்' மட்டுமே அல்ல. அது, வேர் பலமிழந்துவிட்டதை உணர்ந்த கிளைகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் புதிய மண்ணைத் தேடி நகரும் இயற்கையின் உந்துதல். வேர் வலுவாக இருந்தால் எந்தக் கிளையும் மரத்தை விட்டு விழ விரும்பாது.
தொடர் தேர்தல் தோல்விகள்
அரசியல் இயக்கங்களின் 'கனிகள்' என்பது தேர்தல் வெற்றிகளாகும். வேரில் சத்து இல்லாத மரம் எப்படிப் பூக்க மறுத்துக் கனிகளைத் தரத் தவறுமோ, அதேபோல அடிமட்டக் கட்டமைப்பு சரிந்த ஒரு கட்சியால் தேர்தல் களத்தில் வெற்றிக் கனிகளைப் பறிக்க முடியாது. வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாத, வாக்காளர்களை நேரில் சந்திக்கும் துடிப்பான இளைஞர்கள் இல்லாத ஒரு இயக்கம், வெறும் காகிதக் கப்பலாகவே மிஞ்சும். தொடர் தேர்தல் தோல்விகள் என்பது வேரின் பலவீனத்தை மரம் தலைமைக்குக் காட்டும் இறுதி எச்சரிக்கை மணி. ஒரு பெரிய மரம் தன் வேர்களை இழந்து நிழல் தரத் தவறும்போது, அந்த இடத்தை நோக்கிச் சூரிய வெளிச்சம் பாய்கிறது. விளைவு, அந்தப் பெரிய மரத்தின் நிழலில் இத்தனை காலம் வளர முடியாமல் இருந்த புதிய இளங்கன்றுகளும், புதிய அரசியல் சக்திகளும் அதிவேகமாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. இன்று அடிமட்டத் தொண்டர்களும், குறிப்பாக இளைஞர்களும் புதிய திசைகளை நோக்கி நகர்வது இந்த இயற்கை விதியின்படியே.
மரத்தை காப்பாற்ற முடியாது
தலைவர்கள் தற்காலிகமானவர்கள், ஆனால் தொண்டர்களே நிரந்தரமானவர்கள். வேர்களைக் கவனிக்காமல், கிளைகளுக்கு மட்டும் சாயம் பூசுவதால் மரத்தைக் காப்பாற்ற முடியாது. தமிழக அரசியல் இன்று ஒரு மாபெரும் உருமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேர்களைப் புதுப்பித்து, அடிமட்டத் தொண்டர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்காதவரை, எந்தவொரு பேரியக்கமும் கால ஓட்டத்தில் சரிவதைத் தடுக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. உடனே வேர்களின் மீது அக்கறை செலுத்தாவிட்டால், மேலும் புதிய மரங்கள் (புதிய கட்சிகள்) வளர்வதற்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.

