- Home
- Tamil Nadu News
- மிஸ் செய்த மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
மிஸ் செய்த மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
பி.எட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21, 2025 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 20 முதல் வகுப்புகள் தொடங்கும்.

மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள்
கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும். அந்த வகையில் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்களுக்காக பல உதவிகளை அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. மேலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திலும் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது.
மேலும் விரைவில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணியும் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. கலை அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 20 சதவகித சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிஎட் படிப்பில் சேர மாணவர்களுக்கு தேதி முடிவடைந்துள்ள நிலையில், நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் கூடுதல் இடம் ஒதுக்கீடு
மேலும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் கல்லூரி தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், 20.06.2025 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் நேற்றுடன்(09.07.2025) முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி 21.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிஎட் படிப்பிற்கு விண்ணப்பம் - கால நீட்டிப்பு
அரசு கல்வியியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்.) மாணாக்கர் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நேற்றுடன் (09.07.2025) கால அவகாசம் முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது. 31.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 04.08.2025 முதல் 09.08.2025-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 13.08.2025 அன்று மாணாக்கர்களுக்கான உ ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு எப்போது வகுப்புகள் தொடங்கும்.?
மேலும் மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.
மாணாக்கர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.