அதிகாலையில் அதிர்ந்த தூத்துக்குடி.. குலசையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு அணிந்து தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
அதிகாலையில் நடைபெற்ற கொடியேற்றம்
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் இந்த கொடியேற்றமானது இன்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3.00 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்
அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் திருகாப்பு அணிந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.
2ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம்
திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 2-ம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.