- Home
- Tamil Nadu News
- சூப்பர் சான்ஸ்.! திருமண உதவி தொகை 25ஆயிரம் டூ 50ஆயிரம் ரூபாய்.! இவ்வளவு தான் நிபந்தனையா.?
சூப்பர் சான்ஸ்.! திருமண உதவி தொகை 25ஆயிரம் டூ 50ஆயிரம் ரூபாய்.! இவ்வளவு தான் நிபந்தனையா.?
தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு உதவி வருகின்றன. குறிப்பாக, விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கல்வி கற்கும் பெண்களுக்கு இத்திட்டங்கள் பெரும் உதவியாக உள்ளன. இந்தநிலையில் ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் பெற தகுதிகள் என்ன.?

மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்
தமிழக அரசின் சார்பாக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக மகளிர் முன்னேற்றத்திற்காக பார்த்து, பார்த்து அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. யாருடைய உதவியும் தேவையில்லாமல் வாழ வேண்டும் என்ற காரணத்தால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு கிடைக்கிறது. இந்த ஆயிரம் ரூபாயால் அத்தியாவசிய தேவைகள் பெண்கள் நிறைவேற்றிக்கொள்ள முடியும். மேலும் ஆயிரம் ரூபாய் என்று குறைத்து பார்க்காமல் 12 மாதங்கள் என்று பார்த்தால் 12ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். இதன் மூலம் தனது குழந்தைகளுக்கு கால் பவுன் தங்கம் வாங்க முடியும்.
கல்வி, மருத்துவம், சுய தொழில் உதவி திட்டங்கள்
இது மட்டுமில்லாமல் விடியல் திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரவேற்றுள்ள பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சேமிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்ததாக பெண்கள் கல்வியை தொடர வேண்டும் எனவும், இடை நிற்றலை குறைக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியில் இணையும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மாணவிகள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிவதாகவும் கூறப்படுகிறது. அடுத்தாக கர்ப்பினி பெண்களுக்கான டாக்டர் முத்து லட்சுமி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் எளிய பெண்கள் 18ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை பெற முடிகிறது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
தாலிக்கு தங்கம் திட்டம்
இதனையடுத்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்கு சிறு தொழிலுக்காக 50ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்க தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்குவது நிறுத்தப்பட்டு உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. திருமண உதவி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பேர் மட்டுமே பயண்டைந்து வந்த நிலையில் இந்த திட்டத்தால் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமும் திருமணத்திற்கு உதவித்தொகையாக 25ஆயிரம் ரூபாய் முதல் 50ஆயிரம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
திருமண உதவி திட்டம்
இதே போல மற்றொரு திட்டம் தான் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டமாகும், ஆதரவற்ற இளம்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில் 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் முதலாவதாக பட்டதாரி அல்லாதவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இரண்டாவதாக பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல் திட்டத்தில் பயன் பெறுவதற்கு படிக்காதவர்கள் எந்த வித கல்வி சான்றிதழும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் 2வது திட்டமான 50ஆயிரம் உதவி தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் கல்லூரியில் படித்த சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அரசால் அங்கீகாரம் பெற்ற தொலை தூர கல்வியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலம். மேலும் டிப்ளமோ படித்தவர்களும் சான்றிதழோடு விண்ணப்பிக்கலாம்.
marriage
விண்ணப்பிப்பது எப்படி.?
விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும் எனவும் இ- சேவை மையம் மூலமாவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.குறைந்தபட்ச கல்வி தகுதி எதுவுமில்லையென கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்த பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவுவதற்காக தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்
அன்னை தெரசா திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பிக்க சட்டமன்ற உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரிடம் ஆதரவற்றோர் என சான்றிதழ் வாங்கி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தாய், தந்தை இறந்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும். வயது சான்றிதழ், திருமண அழைப்பிதல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி.?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அங்கு அன்னை தெரசா திருமண உதவி திட்டம் என கூறும்பொழுது அவர்கள் விண்ணப்பம் ஒன்றை வழங்குவார்கள். அதனை பூர்த்தி செய்து சான்றிதழோடு வழங்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் தகுதி இருக்கும் பட்சத்தில் திருமண உதவி திட்டத்தை வழங்குவார்கள்.