- Home
- Tamil Nadu News
- உஷார் மக்களே! தப்பி தவறிகூட வெளியே போயிடாதீங்க! 11 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் மழை
உஷார் மக்களே! தப்பி தவறிகூட வெளியே போயிடாதீங்க! 11 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் மழை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புதிதாக உருவாகக்கூடிய மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு. இதன் காரணமாக, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். வருகின்ற 22-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
கனமழை பெய்ய வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் கனமழை வார்னிங்
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (அதாவது 1 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.