- Home
- Tamil Nadu News
- ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களை கட்டம் கட்டி காலி செய்யும் இபிஎஸ்.! நீக்கப்பட்ட அந்த 17 பேர் யார் தெரியுமா.?
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களை கட்டம் கட்டி காலி செய்யும் இபிஎஸ்.! நீக்கப்பட்ட அந்த 17 பேர் யார் தெரியுமா.?
Sengottaiyan expelled from AIADMK : ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியதன் தொடர்ச்சியாக தற்போது செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டு வருகிறது. அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த தலைவராகவும் உள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். ஆனால் அதிமுக தலைமையோ செங்கோட்டையனின் பதவியை பறித்தது. மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கியது.
இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து செங்கோட்டையன் பேசினார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க போவதாக அறிவித்தார்.இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஒட்டு மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பிற்கு வந்த பிறகு ஜெயலலிதாவின் உயிர் தோழியாக இருந்தவர் முதல் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்களை அடுத்தடுத்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற மூத்த நிர்வாகிகள் திட்டமிட்டனர். முதலில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது.
இதனையடுத்து ஆட்சியை ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து பறித்த சசிகலா, மூத்த அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்து சென்றார். அடுத்தடுத்து நாட்களில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அதிமுக பொதுக்குழுவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தோடு கை கோர்த்த எடப்பாடி பழனிசாமி 4 வருட ஆட்சியை நடத்தி முடித்தார். இதனை தொடர்ந்து திமுகவிடம் ஆட்சியை இழந்த நிலையில், கட்சியை கைப்பற்ற திட்டம் போட்ட எடப்பாடி, அதிமுகவின் இரட்டை தலைமையை முடிவுக்கு கொண்டு வந்தார். ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கழட்டி விட்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் சட்ட போராட்டம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பன்ருட்டி ராமசந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன்,
கே.சி.பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி, அன்வர் ராஜா என அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.