- Home
- Tamil Nadu News
- திமுகவில் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திமுகவில் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம், நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதால் திமுக அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. அவ்வப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடன் பிறப்பே வா என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற நிகழ்ச்சி மூலம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் கட்சி பணிகளில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
நேற்று கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக இருந்த நா. கார்த்திக் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தமிழ்செல்வன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ்இந்நிலையில் திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திமுகவில் நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் அடங்கியவை நெல்லை மேற்கு மாவட்டமாகவும், நாங்குநேரி, இராதாபுரம் தொகுதிகள் அடங்கியவை நெல்லை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பனும், நெல்லை கிழக்கு மாவட்டபொறுப்பாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.