- Home
- Tamil Nadu News
- காங்கிரஸை விட திருமா குறைந்தவரா? இப்படி பண்ணாதீங்க.. ஸ்டாலினிடம் பொங்கும் உடன்பிறப்புகள்!
காங்கிரஸை விட திருமா குறைந்தவரா? இப்படி பண்ணாதீங்க.. ஸ்டாலினிடம் பொங்கும் உடன்பிறப்புகள்!
''அண்ணன் திருமா அவர்கள் ஒரு மாதிரி உருக்கமாக அவர்கள் கட்சியினருக்கு பேசியது நம் கட்சி காரர்களின் மனதைக் கூட ஒரு மாதிரி ஆக்கிட்டு தலைவரே'' என்று உ.பி.க்கள் கூறி வருகின்றனர்.

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு சிக்கல்
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியாமல் ஜவ்வாக இழுக்கிறது. காங்கிரஸ் 28 சீட், இந்திய கம்யூனிஸ்டு 5 சீட் வாங்கி விட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என விடாப்பிடியாக உள்ளது. திமுக கொடுக்க மறுக்கிறது. இதேபோல் திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் விசிக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கிறது.
திருமாவளவன் வேதனை
ஆனால் திமுக ஒற்றை இலக்கத்தில் தான் தர முடியும் என பிடிவாதமாக உள்ளது. இது குறித்து வேதனையுடன் தெரிவித்த திருமாவளவன், ''நாம் வளர்வதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. குறைந்த தொகுதிகள் தான் கிடைக்கும். நேர்காணல் தேவையில்லை'' என்று கூறியிருந்தார். நீண்டகாலமாக திமுகவுக்கு விசுவாசமாக இருக்கும் திருமாவளவனை திமுக இப்படி நடத்துவது சரி இல்லை. நேற்று வந்த தேமுதிக, தவெகவுடன் சேரப்போவதாக மிரட்டிய காங்கிரசை விட திருமா குறைந்து விட்டார் என விசிகவினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திருமாவுக்கு திமுகவினரே சப்போர்ட்
இது மட்டுமின்றி திமுகவினரே விசிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டும் என திருமாவளவனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். திமுக ஆதரவாளரான நாகரீக வெற்றிகொண்டான் என்பவர் எக்ஸ் தளத்தில், 'அன்பு தலைவர் ஸ்டாலின் அவர்களே. இன்று எங்கள் பகுதியில் தேவைக்கு போயிருந்தேன். அப்போ அங்கேயும் அரசியல் பேச்சு வந்தது. அப்போது ஒரு 10க்கும் மேற்பட்ட நம்ம கட்சி காரவுங்களே ரொம்ப மனசு வருத்தமாக பேசினாங்க ஏன் நம்ம கட்சி அண்ணன் திருமா விசாயத்தில் இழுக்குறாங்க .
காங்கிரஸ் மாதிரி மிரட்டவில்லை
அண்ணன் திருமா அவர்கள் ஒரு மாதிரி உருக்கமாக அவர்கள் கட்சியினருக்கு பேசியது நம் கட்சி காரர்களின் மனதைக் கூட ஒரு மாதிரி ஆக்கிட்டு தலைவரே. மற்ற கட்சி மாதிரி விஜயை காட்டி அவர் நம்மளை மிரட்டவில்லை. கொள்கையோடு நம்ம கூட பயணிக்கிறார் நம் இருவருக்குமான நல்ல முடிவை தலைவர் எடுக்கனும் என்று பேசினார்கள்.
நல்ல முடிவை எடுங்க தலைவரே...
மற்ற கட்சிகள் மாதிரி நம்மளை மிரட்டி விஜய்யை காட்டி சீட்டு கேட்டிருந்தால் நம்ம ஆளுங்க மனது உருகாது. காங்கியை எதிர்த்த மாதிரி எதிர்த்துருப்பாங்க. ஆனால் அண்ணன் திருமா அவர்களின் உருக்கமான பேச்சு நம்ம ஆட்களின் மனதையும் உருக்கிடுச்சு தலைவரே. நல்ல முடிவை எடுங்க தலைவரே, மன வேதனையையுடன் நாட்களை கடத்துவது இருவருக்குமான இடைவெளியை அதிகரிக்கும் அது எதிரிகளின் வெற்றியை எளிதாக்க வழிவகுக்கும்'' என்று கூறியுள்ளார். இதே போல் மற்ற உடன்பிறப்புகளும் திருமாவுக்கு ஆதரவாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

