- Home
- Tamil Nadu News
- திருச்செந்தூர் கோவில் கடலில் திடீரென வினோத மாற்றம்.! அலறிய பக்தர்கள்- நடந்தது என்ன.?
திருச்செந்தூர் கோவில் கடலில் திடீரென வினோத மாற்றம்.! அலறிய பக்தர்கள்- நடந்தது என்ன.?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரண்டாவது நாளாக கடல் சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இந்த திடீர் நிகழ்வால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிய, கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடனும், சிலர் அச்சத்துடன் பார்த்துச் சென்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தமிழகத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகப் போற்றப்படும் புராதன தலமாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள், அதிலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கடல்கரையில் அமைந்த இக்கோயில், மற்ற ஐந்து படைவீடுகளைப் போல மலைமேல் அமைந்திருக்காமல், அலைகள் அலையும் கடற்கரையில் அழகாகக் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த கடற்கரையின் அழகும் மக்களை வெகுவாக கவரும், அந்த வகையில் கோயிலில் தரிசனம் செய்யும் வரும் பக்தர்கள் கண்டிப்பாக கடலில் குளித்து விட்டு தான் செல்வார்கள். அந்த வகையில் இன்று திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
திருச்செந்தூரில் கோயில் முன் உள்ள கடல் பகுதியில் தண்ணீர் உள் வாங்கி காணப்பட்டது. இரண்டாவது நாளாக சுமார் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியிருந்தது. திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. இன்று காலை முதல் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று திருச்செந்தூர் கோவில் உள்ள கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்படுகிறது. கோவில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 200 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
இதனை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். சிலர் அச்சத்தின் காரணமாக கடல் பகுதிக்கு செல்லாமல் தூரத்தில் இருந்தே கடலை பார்த்து சென்றனர். மேலும் கடல் உள் வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தது.. அதன் மேல் நின்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.