- Home
- Tamil Nadu News
- ஒரு ரூபாய் செலவு இல்லை.. ராமேஸ்வரம் டூ காசி சுற்றுலா.! பக்தர்களுக்கு குஷி - உடனே விண்ணப்பிக்க அழைப்பு
ஒரு ரூபாய் செலவு இல்லை.. ராமேஸ்வரம் டூ காசி சுற்றுலா.! பக்தர்களுக்கு குஷி - உடனே விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களை இலவச ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்கிறது.

தமிழக அரசின் அறநிலையத்துறை திட்டங்கள்
தமிழக அரசு சார்பில் இந்து அறநிலையத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, பக்தர்களுக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு
தமிழ்நாட்டிலுள்ள 20 மண்டலங்களிலிருந்து 600 பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். எனவே இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதி வாய்ந்த பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இலவச ஆன்மிக சுற்றுலா
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் மானசரோவர் மற்றும் முக்திநாத் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, 2025-2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிருந்து காசி அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ராமேஸ்வரம் காசி சுற்றுலா- தகுதிகள் என்ன.?
இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்றும், போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ஆன்மிக சுற்றுலா- விண்ணப்பிக்க அழைப்பு
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 22.10.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்மிக சுற்றுலா- விண்ணப்பிப்பது எப்படி.?
இராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.