- Home
- Tamil Nadu News
- தித்திக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்..! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தித்திக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்..! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர்களின் மிகமுக்கிய பண்டிகைகளில் ஒன்றான தை பொங்கல் திருநாள் வருகின்ற 15ம் தேதி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
உழவர்களுக்கு நன்றி கூறும் திருவிழா
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உலக மாந்தர் அனைவருக்கும் உயிர் வளர்க்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்திடும் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவிவரும் கதிரவனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய்விளங்கிடும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உழைப்பால் உணவளித்து பசிப்பிணி போக்குவதையே வாழ்வு எனக் கொண்டுள்ள உழவர் பெருங்குடி மக்களுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரியமான உன்னத விழா இனிய பொங்கல் திருநாள் 15.1.2026 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 இலட்சத்து 21 ஆயிரத்து 170 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியற்றுடன் ரொக்கம் ரூபாய் 3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் இன்று (8.1.2026) காலை தொடங்கிவைக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் விநியோகம்
அதே நேரத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாவட்டங்களில் பொங்கல் பொருள்களையும்,ரொக்கப்பணம் ரூபாய் 3,000/-யும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயநிலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன.

