- Home
- Tamil Nadu News
- சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பேருந்து.! பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இல்லை.. ட்விஸ்ட் வைத்த அரசு
சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பேருந்து.! பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இல்லை.. ட்விஸ்ட் வைத்த அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கிய இரட்டைத் தள மின்சாரப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து, சென்னையின் முக்கிய வரலாற்று கலாச்சார இடங்களை உள்ளடக்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் – 2026” விழாவில், பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட இரட்டைத் தள மின்சார (Double-Decker EV Bus) பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் (NRI) மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து, ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ஒரு இரட்டைத் தள மின்சார (EV) பேருந்தை ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு (TTDC) பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை இயக்குவதற்காக வழங்கப்பட்ட இப்பேருந்தின் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். இப்பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள், சென்னை நகரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தகவல் சார்ந்த மற்றும் அனுபவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னையில், முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின் படி, TTDC தலைமையகம் – LIC – ஸ்பென்சர் பிளாசா – மக்கா மஸ்ஜித் – பி. ஓர் & சன்ஸ் (வாட்ச் டவர்) – பல்லவன் சாலை – பாடிகார்டு முனீஸ்வரர் கோவில் – ராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை உயர்நீதிமன்றம் – தலைமைச் செயலகம் – ரிசர்வ் வங்கி – சென்னை துறைமுகம் – வெற்றி போர் நினைவுச்சின்னம் – நேப்பியர் பாலம் – பேரறிஞர் அண்ணா அவர்கள் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் -முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் - செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆகியோரது நினைவிடங்களில் இயக்கப்பட உள்ளது.
மேலும் மெரினா கடற்கரை – கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் கடற்கரை – சாந்தோம் தேவாலயம் – அகில இந்திய வானொலி – கலங்கரை விளக்கம் - காவல்துறை தலைமை அலுவலகம் – குயின் மேரீஸ் கல்லூரி – விவேகானந்தர் இல்லம் – பிரெசிடென்சி கல்லூரி – எழிலகம் – சென்னை பல்கலைக்கழகம் – தூர்தர்ஷன் கேந்திரா – இராஜாஜி மண்டபம் – ஓமந்தூரார் அரசு மருத்துவமனை – TTDC தலைமையகம் ஆகிய வழித்தடங்களில், நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாகக் காணும் வகையில் பனோரமிக் (Panoramic) பார்வை வசதியுடன் இப்பேருந்தின் சேவை இயக்கப்பட உள்ளது.

