- Home
- Tamil Nadu News
- பறவை காய்ச்சலால் பொதுமக்கள் அலறம்! கோழி கறி சாப்பிடக்கூடாதா? இந்த அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு போங்க.!
பறவை காய்ச்சலால் பொதுமக்கள் அலறம்! கோழி கறி சாப்பிடக்கூடாதா? இந்த அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு போங்க.!
bird flu: சென்னையில் இறந்த காகத்திற்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதன் பரவலைத் தடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பறவை காய்ச்சல்
தமிழ்நாட்டில், சில மாவட்டங்களில் குறிப்பாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் காகங்கள் இறந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில் ஓர் இறந்த காகத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதன் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், தலைமை செயலாளர் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
பறவை காய்ச்சல் தொடர்பாக ஆலோசனை
அதில் அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) அரசு செயலர் (கால்நடை மற்றும் பால்வளத்துறை), ஆணையர் சென்னை மாநகராட்சி, கூடுதல் செயலர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை வனப்பாதுகாவலர், இயக்குநர்கள்(கால்நடை பராமரிப்பு துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை), இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, இயக்குநர், மருத்துவ பணிகள் மற்றும் ஊரக நலப்பணிகள், கூடுதல் இயக்குநர் (மருத்துவ கல்வி துறை), கூடுதல் இயக்குநர் (நோய் கட்டுப்பாடு), இயக்குநர் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அவர்கள் பறவை காய்ச்சல் பரவும் முறைபற்றியும், மனிதர்களில் இதுவரை நமது மாநிலத்தில் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லையெனவும், அதன் பரவலை தடுத்திட பொது சுகாதாரத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாவட்ட அளவில் பறவை காய்ச்சல் தடுப்பு பற்றி மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடந்த பிப்ரவரி 06ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்துறைகளுடன் இணைந்து மாவட்ட அளவில் எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான தகுந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான முக்கிய அறிவுரைகள்
* மக்கள் பறவை காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை
* எங்கேனும் காகம் மற்றும் பறவை இறந்த விவரம் அறியப்பட்டால் உடனடியாக கால்நடை துறைக்கு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
* யாருக்கேனும் காய்ச்சல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை
அணுகி உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை நன்கு சமைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.
* பறவை காய்ச்சலை பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்.
* பறவை காய்ச்சல் பற்றிய சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். எனவே பொதுமக்கள் பறவை காய்ச்சல் பற்றிய அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

