- Home
- Tamil Nadu News
- தோல்வி பயம்.. முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? விளாசும் இபிஎஸ்
தோல்வி பயம்.. முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? விளாசும் இபிஎஸ்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?
28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.
கடந்த ஆண்டுகளில் கோடைகாலம் வரவில்லையா..?
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
யாரும் எந்தவொரு திட்டத்தையும் தடுக்கவில்லை
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே... யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
வாய்கிழிய வாக்குறுதி..
"அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

