- Home
- Tamil Nadu News
- 16 நாட்களுக்கு பிறகு வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்த விஜய்!
16 நாட்களுக்கு பிறகு வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்த விஜய்!
கரூர் சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார். வந்தவுடன் அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை விஜய் வழங்கியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்
தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் தவெகவை கடுமையாக சாடியிருந்த சென்னை உயர்நீதிமன்றம், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
தவெக தலைவர்களுக்கு நிம்மதி
மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் கண்டனம் தெரிவித்து இருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவெக தலைவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார்.
16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்
அதே வேளையில் புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் கரூர் சம்பவத்துக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தனர். இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில், தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும், சி.டி. நிர்மல் குமாரும் 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தனர்.
விஜய்யுடன் ஆலோசனை
இருவரும் வெளியே வந்தவுடன் தவெக தலைவர் விஜய்யை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர். குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
தவெகவின் எதிர்கால திட்டம் என்ன? விஜய் கரூக்கு பாதிக்கப்பட்டோரை சந்திக்க செல்லும்போது என்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும்? என்பது குறித்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். கரூர் செல்வதற்காக வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்துக்கு புஸ்ஸி ஆனந்த் சரியாக நிர்வகிக்காததே காரணம் என கூறப்படும் நிலையில், விஜய் மீண்டும் அவருக்கு பொறுப்பு வழங்கியுள்ளது தவெகவினர் சிலரே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.