மக்களை அழ வைத்து அந்தர் பல்டி அடித்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன தெரியுமா.?
ஒரு கிலோ 200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட தக்காளியானது படிப்படியாக வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒரு கிலோ 40 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தக்காளியை 2 அல்லது 3 கிலோ என வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர்.
உச்சத்தை தொட்ட தக்காளி விலை
தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. 5 கிலோ தக்காளி 50 ரூபாய் என்ற கணக்கில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் தக்காளி வீட்டிற்கு அள்ளி சென்றனர். இதனையடுத்து ஒரு சில நாட்களிலேயே தக்காளி விலை உச்சத்தை தொட ஆரம்பித்தது. ஒரு கிலோ 50 ரூபாய் என்ற நிலையை தொட்ட தக்காளி நாளுக்கு நாள் விலை அதிகரிக்க தொடங்கியது. அடுத்த சில நாட்களில் சதம் அடித்த தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இரட்டை சதம் அடித்து பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்தது.
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவு வகைகள் தயாரிப்பதை தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது. இருந்த போதும் பெரும்பாலான மக்களுக்கு நியாயவிலைக்கடை தக்காளி கிடைக்காத காரணத்தால் வெளி மார்க்கெட்டில் வாங்கினர். இந்தநிலையில் தான் தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பை தொட்டியில் கொட்டிய நிலையில் மாற்று பயிருக்கு சென்றதால் தக்காளி உற்பத்து குறைந்ததாக தெரிவிக்கின்றனர்.
Tomato price hike
மீண்டும் குறைந்த தக்காளி விலை
மேலும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள்தோறும 1000 முதல் 1100 டன் தக்காளி வரத்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 300 முதல் 400 டன் வரை மட்டுமே தக்காளி வந்தது. இத்ன காரணமாகவே தக்காளி விலை அதிகரித்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் தக்காளி விலை குறைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியானது படிப்படியாக குறைந்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக எண்ணிக்கை கணக்கில் தக்காளியை பொதுமக்கள் வாங்கிய நிலை மாறி கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.