- Home
- Tamil Nadu News
- அடி தூள்.. மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூ.30 லட்சம்.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு
அடி தூள்.. மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூ.30 லட்சம்.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு
scholarship scheme : வெளிநாடுகளில் முதுகலைப் படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற, தகுதியுடைய மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி உதவித்தொகை, கல்வி உபரகணங்கள், இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் சென்று படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 30 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின முஸ்லீம் மாணவ -மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மற்றும் மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவனுக்கு தலா ரூபாய் 30 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS ( குவாக்கரெல்லி சைமண்டஸ்) தர வரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைகழகங்கள் / நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல் மருத்துவம்.சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல் மனித நேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப்பட்டப்படிப்பிற்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 31.10.2025க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டம் முதல்தளம், சென்னை 600 005 என்ற முகவரியில் சமர்ப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.