- Home
- Tamil Nadu News
- 30 நாளில் இவ்வளவு பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு மனுவா.!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு
30 நாளில் இவ்வளவு பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு மனுவா.!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு
மக்களின் இல்லங்களுக்கே சென்று அரசு சேவைகளை வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 43க்கும் மேற்பட்ட சேவைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன

உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும்"உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் நகர்ப்புறங்களில் 13 அரசுத் துறைகளின் கீழ் உள்ள 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் கீழ் உள்ள 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இதற்கென வாரத்தில் 4 நாள்கள் சிறப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருகின்றன. பிற மனுக்களைப் பொருத்தவரை, அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரே முகாமில் 43 சேவைகள்
உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்
இந்த முகாமில் முக்கியமாக மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாய் பெறுவதற்கான வரிசையில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்து மனுக்களை வழங்கி வருகிறார்கள். ஏற்கனவே 1.16 கோடி மகளிர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வரும் நிலையில், தற்போது இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குகின்றனர். தற்போது வரை 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 88 ஆயிரத்து 611 ஆகும். அவற்றில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு, 13 லட்சத்து 72 679 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்களில் பெரும்பாலான சேவைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
45 நாட்களில் மனுக்கள் மீது தீர்வு
அதே நேரம் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மனு கொடுக்கப்பட்டு 45 நாட்களுக்குள் மகளிர் உரிமை தொகை தொடர்பான விவரங்கள் விண்ணப்பித்தவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எனவே கடந்த ஜூலை 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் மகளிர் உரிமை தொகை பெற தகுதியா.? இல்லையா என்ற விவரம் தெரிவிக்கும் வகையில அரசு திட்டமிட்டுள்ளது.