தொடர் மழை! வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயரும் அபாயம்!
தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Vegetable Prices Rising In Tamilnadu
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவையிலும், நீலகிரியிலும் கனமழை கொட்டி வருகிறது. கோவை மாவட்டத்தில், வேளாண் நிலங்கள் அதிகம் உள்ள புறநகர்ப் பகுதிகளில் விட்டு, விட்டு கன மழையும், தொடர் சாரல் மழையும் பெய்தது.
கோவையில் கனமழை
இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் இடையே இந்தாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த போதிலும் முக்கிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்தது. வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரையிலும் வீழ்ச்சியை சந்தித்தது.
காய்கறிகளின் வரத்து
இதனால் மார்க்கெட்டுகள் மட்டுமின்றி வாகனங்களிலும் 6 கிலோ முதல் 7 கிலோ வரை 100 ரூபாய்க்கு தக்காளியும், 4 முதல் 5 கிலோ 100 ரூபாய்க்கு வெங்காயமும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் பிற காய்கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைக் காய் கறிகளும், சுரைக்காய், பூசணிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், அரசாணிக்காய், பச்சை மிளகாய், உள்ளிட்ட சம தளக் காய்கறிகளும் நிலையான விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
காய்கறிகள் விலை உயரும் அபாயம்
இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல இடங்களில் காய்கறிகளின் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக் காலம் என்பதால், விளை நிலங்களிலும் இருந்து உழவர் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்வை சந்திக்கும் அபாயம் உள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.