#INDvsENG சுந்தரின் சதம் மிஸ்; அஷ்வின், அக்ஸர் சுழலில் சுருளும் இங்கிலாந்து! இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. 4ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். லாரன்ஸ் 46 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்திருந்தது. அபாரமாக ஆடி சதமடித்த ரிஷப் பண்ட் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்ட முடிவில், வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்ஸர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
3ம் நாளான இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர். இருவருமே சிறப்பாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு சுந்தரும் அக்ஸரும் இணைந்து 106 ரன்கள் அடித்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அக்ஸர் படேல் 43 ரன்னில் ரன் அவுட்டாக, அதன்பின்னர் இஷாந்த் மற்றும் சிராஜ் ஆகிய இருவரையும் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் வீழ்த்திவிட்டார். அதனால் 96 ரன்களுடன் களத்தில் நாட் அவுட்டாக இருந்த வாஷிங்டன் சுந்தரால் சதமடிக்க முடியாமல் போய்விட்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்கள் அடித்தது.
160 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை, தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் மீண்டுமொரு முறை அஷ்வின் மற்றும் அக்ஸரின் சுழலை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஜாக் க்ராவ்லி(5), பேர்ஸ்டோ(0) ஆகியோரை அஷ்வின் வீழ்த்த, டோமினிக் சிப்ளி(3) மற்றும் பென் ஸ்டோக்ஸை(2) அக்ஸர் படேல் வீழ்த்தினார்.
ஆலி போப்பை 15 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்த, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ஜோ ரூட்டை 30 ரன்னில் அஷ்வின் வீழ்த்தினார். அஷ்வினும் அக்ஸரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, 3ம் நாள் டீ பிரேக்கின்போது 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 91 ரன்கள் அடித்திருந்தது.