ஆஸி., அணியின் அடுத்த கேப்டன் யார்..? தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் அதிரடி
ஆஸி., அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து தற்போதைய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
3 விதமான போட்டிகளுக்குமான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், 2018ல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன்சியை இழந்தார். இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்களாக ஆரோன் ஃபின்ச்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர்.
டிம் பெய்னின் கேப்டன்சி சிறப்பாக இல்லை. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் 2 முறை தோற்றார். டிம் பெய்ன் கேப்டனான பிறகு, அவர் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை, கேப்டன்சியிலும் சோபிக்கவில்லை. எனவே ஆஸி., அணியின் கேப்டன்சி குறித்த பேச்சு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.
அந்தவகையில், இப்போது அதுகுறித்து பேசியுள்ள டிம் பெய்ன், மார்னஸ் லபுஷேனிடம் கேப்டன்சி திறன் இருப்பதாகவும், அவர் கண்டிப்பாக ஆஸி., அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். லபுஷேனிடம் இயல்பாகவே மிகச்சிறந்த லீடர்ஷிப் திறன் இருப்பதாகவும், அவர் வீரர்களிடம் பழகும் விதம், அவரது அணுகுமுறை ஆகியவை அவர் சிறந்த கேப்டனாக ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் டிம் பெய்ன் தெரிவித்தார்.