#AUSvsIND கோப்பையை வாங்கிய கையோடு நடராஜனிடம் கொடுத்து அழகுபார்த்த கேப்டன் ரஹானே..!
ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, இந்த தொடரில் தனது ஒவ்வொரு செயலின் மூலமும் கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை வாங்கிய கேப்டன் ரஹானே, அதை உடனடியாக அறிமுக வீரர் நடராஜனிடம் கொடுத்து அழகுபார்த்தார்.
ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகக்கவனமாக செயல்பட்டு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் ரஹானே, இந்த தொடரிலும் அதை செய்தார்.
தனது அடக்கமான மற்றும் அமைதியான பண்பாலும் அனைவரையும் கவர்ந்தார். டெஸ்ட் தொடரை வென்ற பின், கோப்பையை வாங்குவதற்கு முன்பாக, தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆஸி., ஸ்பின்னர் நேதன் லயனுக்கு, இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை வழங்கி கௌரவப்படுத்தினார் ரஹானே. ரஹானேவின் இந்த செயல், அனைவரது பாராட்டையும் பெற்றது.