ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் பெரும் சிக்கலும் அதற்கான தீர்வும்..!
ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணியில் ரெய்னாவின் இடத்தை யாரை இறக்கலாம் என்று சிஎஸ்கேவின் முன்னாள் வீரரும் நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டருமான ஸ்காட் ஸ்டைரிஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், அந்த அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா துபாயிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார்.
ஐபிஎல்லில் 5368 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இருக்கும் ரெய்னா, இந்த சீசனில் ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்புதான்.
இந்நிலையில், ரெய்னா இறங்கிவந்த 3ம் வரிசையில் யாரை இறக்குவது என்பதுதான் ஹாட் டாபிக்காக இருந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான ஷேன் வாட்சன் கூட, ரெய்னாவை போன்றே ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடக்கூடிய, சிறந்த வீரரான முரளி விஜயை அந்த வரிசையில் இறக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்கேவின் முன்னாள் வீரரும் நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டரும் ஐபிஎல்லின் முக்கியமான வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ், சிஎஸ்கே அணிக்கு 3ம் வரிசையில் யாரை இறக்குவது என்று முடிவெடுப்பது சவாலான காரியம் தான். அந்த இடத்தில் அம்பாதி ராயுடுவை இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அம்பாதி ராயுடு எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி சிறப்பாக ஆடக்கூடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.