#AUSvsIND டெஸ்ட் போட்டிகளில் இவங்க 2 பேர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இறங்கணும்..! சச்சின் அதிரடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 2018-2019ல் சுற்றுப்பயணம் சென்றபோது, முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. அதற்கடுத்து இப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.
இந்த முறை இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாகவே இருந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது சவாலான காரியமாகவே இருக்கும்.
ஆனால் அதேவேளையில் கோலி(கடைசி 3 டெஸ்ட்), ரோஹித் ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமான விஷயம். கடந்த ஓராண்டாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரோஹித் சர்மா இந்த தொடரில் ஆடவில்லை.
அதேவேளையில், டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்திருந்த ராகுலுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஒரு தொடக்க வீரர் மயன்க் அகர்வால் என்பது உறுதியான விஷயம். ரோஹித் சர்மா ஆடாததால், மயன்க் அகர்வாலின் ஓபனிங் பார்ட்னராக ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரில் ஒருவர் இறங்க வேண்டும். அவர்கள் இருவரில் யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை பொறுத்து அணி நிர்வாகம் தான் அதுகுறித்த முடிவெடுக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.