எங்களை பற்றி யாராவது கவலைப்பட்டாங்களா? இப்ப மட்டும் பொத்துகிட்டு வருதோ? வான் மாதிரி ஆட்களின் வாயைஅடைத்த ரோஹித்
சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தை விமர்சித்தவர்களுக்கு ரோஹித் சர்மா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடந்தன. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த போட்டிக்கான சென்னை ஆடுகளம், பேட்டிங்கிற்கு சவாலாக இருந்தது. இதையடுத்து ஆடுகளத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸி., முன்னாள் வீரர் மார்க் வாக் உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்தனர். இங்கிலாந்தின் படுதோல்விக்கு ஆடுகளமே முக்கிய காரணம் என்கிற ரீதியில் விமர்சித்தனர்.
ஆனால் அதே ஆடுகளத்தில் தான் இந்திய வீரர்களும் ஆடினார்கள் என்ற எதார்த்தத்தை எடுத்துக்கூறி, இதுமாதிரியான ஆடுகளங்களில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய வீரர்கள் கற்றுக்கொடுத்ததாகவும், இந்திய வீரர்கள் அளவிற்கு சிறப்பாக ஆட தவறிவிட்டதாகவும் மிக நேர்மையாக பேசினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள ரோஹித் சர்மா, நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஆடும்போது யாரும் எங்களை பற்றி யோசிப்பதே இல்லை. பின், நாங்கள் மட்டும் ஏன் மற்றவர்களைபற்றி யோசிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு, Home, Away என்றெல்லாம் இல்லாமல் ஆடுகளத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
இரு அணிகளுமே ஒரே பிட்ச்சில் தான் ஆடுகிறோம். அப்படியிருக்கையில், பிட்ச்சின் மீது குற்றம் சுமத்துவது என்ன மாதிரியான நியாயம் என எனக்கு புரியவில்லை. இந்தியாவில் பிட்ச்கள் இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்தும், பிட்ச் ஒரு குறிப்பிட்ட வகையில் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். அனைத்து அணிகளும் சொந்த மண்ணில் அவர்களது பலத்திற்கு ஏற்பவே பிட்ச்ச்சை தயார் செய்கிறார்கள் என்று ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.