ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனை பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த ரோகித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
4 டெஸ்ட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
ஆஸ்திரேலியா 177 ரன்கள்
டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரோகித் சர்மா
இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் விளாசினார். தொடர்ந்து பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா சாதனை
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மார்க் வாக் கூறுகையில், ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிடமிருந்து போட்டியை கவர்ந்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 98.2 சராசரி வைத்திருக்கிறார். ரோகித் சர்மா 74.7 சராசரியுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
டெஸ்ட்டில் 57.42 சராசரி
தொடக்க வீரராக ரோகித் சர்மா டெஸ்ட்டில் 57.42 சராசரி வைத்திருக்கிறார். ரோகித் சர்மா டெஸ்ட் என்று ஆடாமல் ஒரு நாள் போட்டி என்று ஆடி இந்திய அணிக்கு அதிக ரன்கள் சேர்த்து கொடுத்தால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில்லை அணியில் இடம் பெறச் செய்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
கேஎல் ராகுல் 71 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரி மட்டும் அடித்து 20 மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், ஒரு சுழற்பந்துவீச்சாளராக ஏற்கனவே 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் குவித்து ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பௌலராக அவர் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அப்படியிருக்கும் போது ஒரு பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.