- Home
- Sports
- Sports Cricket
- Rohit Sharma: வயது வெறும் நம்பர்தான்! 39 வயதில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
Rohit Sharma: வயது வெறும் நம்பர்தான்! 39 வயதில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
Rohit Sharma: ஹிட்மேன் ரோகித் சர்மா 39 வயதில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோகித் சர்மா புதிய சாதனை
இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு புது அத்தியாயத்தை எழுதியுள்ளார். வயது என்பது வெறும் நம்பர் தான் என்று அவர் நிரூபித்துள்ளார். அதாவது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய மிக வயதான வீரர் என்ற பெருமையை இன்று தரம்சாலாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ரோகித் பெற்றார்.
39 வயதில் ரோகித் சாதனை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர் ஃபார்மெட்டில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்ததன் மூலம், இன்னும் விளையாட விரும்புவதாகவும், அணிக்காக ரன் குவித்து வெற்றி தேடித் தர விரும்புவதாகவும் ரோஹித் உணர்த்தியுள்ளார். 39 வருடம் 44 நாட்கள் வயதில், மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா இந்திய ஜெர்சியில் களமிறங்கினார்.
இதன் மூலம், கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ஒரு சாதனை தகர்க்கப்பட்டது. இதுவரை இந்த சாதனை முன்னாள் இந்திய வீரர் மொஹிந்தர் அமர்நாத் வசம் இருந்தது. அவர் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியபோது அவருக்கு வயது 39 வருடம் 36 நாட்கள். இப்போது அந்த சாதனையை 'ஹிட்மேன்' முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
2007-ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரோகித் சர்மா
1987-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தவர் ரோகித் சர்மா. 2007-ல் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானதில் இருந்து, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய பெயர்களில் ஒன்றாக அவர் திகழ்கிறார். இந்த நீண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் ரோகித். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது மொத்த ரன்கள் 20,000-க்கும் அதிகம். வயது என்பது வெறும் எண்தான் என்பதை இந்திய அணியின் இந்த நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்.
குறுகிய ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அணியின் முக்கிய உறுப்பினராக ஹிட்மேன் இருக்கிறார். 2027 ஒருநாள் உலகக் கோப்பையிலும் அவர் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித், இப்போது 50 ஓவர் ஃபார்மெட்டில் மட்டுமே நாட்டுக்காக விளையாடுகிறார்.
தொடர்ச்சியான ஆட்டம், ஃபிட்னஸால் கிடைத்த வெற்றி
நவீன கிரிக்கெட்டில் 39 வயதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. எனவே, அவரது இந்த வெற்றியை வெறும் புள்ளிவிவரமாகப் பார்க்காமல், ஃபிட்னஸ், தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தனித்துவமான உதாரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கிறார்கள். ரோகித்தை தேர்வு செய்வதன் மூலம், அணி நிர்வாகம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதும் தெளிவாகிறது.

