லாக்டவுனில் செமயா என்ஜாய் பண்ணிருக்காப்ள.. ஓவர் வெயிட்டால் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் வாய்ப்பை இழக்கவுள்ளார் ரிஷப் பண்ட்.
ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களான பிரித்வி ஷா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோருக்கான வாய்ப்பு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்துவரும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவரும் இஷான் கிஷன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
3 விதமான அணிகளிலும் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்ட், தொடர் சொதப்பலால் அணியில் தனது வாய்ப்பை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இழந்துவிட்டார். மோசமான விக்கெட் கீப்பிங்கால் டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்ததால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் ஆடும் லெவனில் அவரது இடம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், 32 பேர் கொண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் கூட ரிஷப் பண்ட் இடம்பெறுவது சந்தேகமாகியுள்ளது. ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் சரியாக ஆடாதது மட்டுமல்லாது, அவரது உடல் எடையும் மிக அதிகமாக உள்ளதாக இந்திய அணியின் உடற்பயிற்சி ட்ரெய்னர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியில் கடந்த 3 ஆண்டுகளாகவே ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. யோ யோ டெஸ்ட்டில் தேறாத காரணத்தினாலேயே சில சிறந்த வீரர்கள் அணியில் இடத்தை தவறவிட்டுள்ளனர். ஃபிட்னெஸில் சமரசமே செய்து கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், லாக்டவுனில் அனைத்து வீரர்களும் ஃபிட்னெஸில் கவனம் செலுத்திய நிலையில், ரிஷப் பண்ட் ஃபிட்னெஸில் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்திருக்கிறது.
எனவே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் எடுக்கப்படுவது சந்தேகமாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய அணியின் ஃபிட்னெஸ் ட்ரெய்னர் ரிஷப் பண்ட்டுடன் ஆலோசித்து வருகிறார். அவர் கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் தான் ரிஷப் பண்ட் தேர்வாவது உறுதியாகும். ஆனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பு குறைவே.
ஏற்கனவே டெஸ்ட் அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹாவும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் கேஎல் ராகுலும் செயல்பட்டுவருகின்றனர். அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் ஆடும் லெவனில் தனது இடத்தை ஏற்கனவே இழந்துவிட்ட ரிஷப் பண்ட், தற்போது ஸ்குவாடிலேயே இடத்தை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.