#IPL2021 இந்த சீசனில் அவரை வேற லெவலில் பார்ப்பீங்க..! ஓவர் பில்டப் கொடுக்கும் கிங் கோலி
க்ளென் மேக்ஸ்வெல்லிடம் இப்போது வேற லெவல் எனர்ஜியை பார்ப்பதாக ஐபிஎல் 14வது சீசனுக்கு முன்பாக, அவர் இந்த சீசனில் ஆடப்போகும் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. இன்று சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜாமிசன் ஆகிய வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்த ஆர்சிபி அணி, முன்பை விட இந்த சீசனில் வலுவான அணியை பெற்றிருப்பதாக நினைக்கிறது. ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்ததில் ஒரு வீரரின் தேர்வு மட்டும் விமர்சனத்திற்குள்ளானது. மேக்ஸ்வெல் தான் அது.
ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சொதப்பிவரும் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் ஆடி வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். ஐபிஎல்லில் அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி. ஆர்சிபி அணி இவ்வளவு தொகை கொடுத்து மேக்ஸ்வெல்லை எடுத்ததை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் விமர்சித்தனர்.
ஆனால், ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல் தேர்வில் முழு திருப்தி அடைந்தது மட்டுமல்லாது, அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் வைத்துள்ளார்.
மேக்ஸ்வெல் குறித்து பேசிய விராட் கோலி, மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டும் என்ற திடமான முடிவில் ஏலத்தில் அவரை எடுத்தோம். ஆர்சிபி மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுப்பதற்கு முன்பாகவே, ஆடம் ஸாம்பா(ஆர்சிபி வீரர்) மேக்ஸ்வெல்லுக்கு ஆர்சிபி தொப்பியை கொடுத்துள்ளார். அந்த வீடியோவை பயிற்சியின்போது ஸாம்பா என்னிடம் காட்டினார். அதை நான் மேக்ஸ்வெல்லுக்கும் அனுப்பினேன். மேக்ஸ்வெல் சிறந்த வீரர். நல்ல மனிதர். ஆஸி., சுற்றுப்பயணத்தின் போது அவருடன் பழகினேன். ஆர்சிபி அணிக்காக ஆடப்போவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் மேக்ஸ்வெல். முன்பு எப்போதையும் விட, இம்முறை அவரிடம் வேற லெவல் எனர்ஜியை நான் பார்க்கிறேன் என்று கோலி தெரிவித்துள்ளார்.